லடாக்-கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பாஜக இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனே 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு என்று இருந்த சிறப்பு அதிகாரம் 370-ஐ ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு மாநிலங்களாகப் பிரித்தது.
இதனால், அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. இதைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ராணுவத்தைக் கொண்டு ஊரடங்கு விதித்தது ஒன்றிய அரசு. மேலும் இணையத்தை முடக்கியது. அதோடு முன்னாள் முதல்வர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிய அரசு வீட்டுச் சிறையில் அடைத்தது. கிட்டத்தட்ட ஒருவருடங்களுக்கு மேலாக அம்மாநிலத்தில் என்ன நடந்தது என்றே வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியே வரவே அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடவேண்டி இருந்தது.
இந்நிலையில்தான் லடாக் - கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. மொத்த உள்ள 30 இடங்களில் 26 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸ் கட்சியியும் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 22 இடங்களில் வெற்றி பெற்றது. 17 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
அதேபோல், “லடாக் - கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு பாஜகவின் நடவடிக்கையை அம்மாநில மக்கள் உறுதியாக எதிர்த்துள்ளார்கள் என்பது இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த 6 மாநிலங்களில் நடந்த 7 இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லடாக் - கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.